Tuesday, April 22, 2008

ஆதித்ய ஹ்ருதயம் - 2


ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரத்தின் முதல் ஐந்து சுலோகங்களை சென்ற பகுதியில் பார்த்தோம். இந்தப் பகுதியில் ஆறாவது சுலோகத்திலிருந்து பார்க்கலாம்.

ரஸ்மிமந்தம் ஸமுத்யந்தம் தேவாசுர நமஸ்க்ருதம்
பூஜயஸ்வ விவஸ்வந்தம் பாஸ்கரம் புவனேஸ்வரம் 6

rasmimantham samudyantham dEvAsura namaskrutham
puujayasva vivasvantham bhAskaram bhuvanEsvaram 6


ரஸ்மிமந்தம் - இதமான பொன்னிறக் கதிர்களை உடையவன். ரஸ்மி என்றால் பொன்னிறக் கதிர்கள். ரஸ்மிமந்தம் என்றால் பொன்னிறக் கதிர்களை உடையவன்.

ஸமுத்யந்தம் - தினந்தோறும் தவறாமல் உதிப்பவன்; எந்தவித வேறுபாடும் இல்லாமல் எல்லோருக்கும் சமமாக ஒளி தருபவன்.

தேவாசுர நமஸ்க்ருதம் - தேவர்களாலும் அசுரர்களாலும் வணங்கப்படுபவன். எல்லோருக்கும் சமமாக ஒளி தருவதால் தேவர்களும் அசுரர்களும் இவனை வணங்குகிறார்கள். (தேவர்களும் அசுரர்களும் இரு வேறு இனத்தவர்கள் என்றொரு கருத்தாக்கம் இப்போது வழங்கி வருகிறது. அந்தக் கருத்தாக்கம் உண்மையெனில் இந்த சொற்றொடர் இரு இனத்தவர்களும் சூரியனை வணங்கிவந்தார்கள் என்பதைச் சுட்டுகிறது. உலகில் எல்லா இனங்களும் பகலவனைப் போற்றியிருக்கிறார்கள் என்பது இப்போது தெரிவதும் அந்த எண்ணத்திற்குத் துணை செய்கிறது).

பூஜயஸ்வ - வணங்கத் தகுந்தவன். எல்லோருக்கும் சமமாக ஒளி தருபவன்; கடமைக்கு ஒரு நேரடி எடுத்துக்காட்டாக இருப்பவன். அதனால் எல்லோராலும் வணங்கப்படுபவன்; அப்படி வணங்கத் தகுந்தவன்.

விவஸ்வந்தம் - தன்னுடைய ஒளியால் சூரிய மண்டலத்தை வலம் வருபவன். பகலவனின் ஒளி வெகு தூரம் பாய்கிறது. அங்கெல்லாம் அவன் வலம் வருகிறான். அதனால் அவனுக்கு விவஸ்வான் என்று பெயர்.

பாஸ்கரம் - ஒளியை உண்டு பண்ணுபவன். உலகத்தில் தோன்றும் எல்லா சோதிகளும் இவனை அடிப்படையாகக் கொண்டவையே. பகலவனாகத் தானே ஒளிர்கிறான்; சந்திரனுக்குத் தன் ஒளியைத் தந்து ஒளிர வைக்கிறான். இவன் ஒளியால் தோன்றிய பொருட்களில் தீயை உண்டு பண்ணி தீயை ஒளிர வைக்கிறான்.அதனால் இவனே எல்லா ஒளிகளையும் உண்டுபண்ணுபவன். பாஸ்கரன்.

புவனேஸ்வரம் - இப்படி எல்லா இயக்கங்களுக்கும் காரணமாக இருப்பதால் இவனே உலகங்களுக்கெல்லாம் தலைவன்.

ஸர்வ தேவாத்மகோ ஹ்யேச தேஜஸ்வீ ரஸ்மிபாவன:
ஏச தேவாசுர கணான் லோகான் பாதி கபஸ்திபி: 7

sarva dEvAthmakO hyEsa tEjasvee rasmibhavana:
yEsa dEvAsura ganAn lOkAn pAti gabhastibhi: 7

ஸர்வ தேவாத்மகோ ஹ்யேச - இவனே எல்லா தேவர்களாகவும் இருக்கிறான். ஸர்வ தேவ ஆத்மக: என்றால் 'எல்லா தேவர்களின் உருவமாக' என்று பொருள். ஹி என்றால் 'உறுதியாக இருக்கிறான்' என்று பொருள். ஏச என்றால் இவன்; இந்த புருஷன் என்று பொருள்.

தேஜஸ்வீ - ஒளிமயமானவன்; வீரன்.

ரஸ்மிபாவன: - தன்னுடைய இதமானப் பொன்னிறக் கதிர்களால் எல்லாவற்றையும் பாதுகாப்பவன்.

ஏச - இவனே

தேவாசுர கணான் - தேவர்களின் கூட்டத்தையும் அசுரர்களின் கூட்டத்தையும்

லோகான் - எல்லா உலகங்களையும்

பாதி கபஸ்திபி: - தன்னுடைய கதிர்களால் பாதுகாக்கிறான்.

ஏச ப்ரஹ்மாச விஷ்ணுச்ச சிவ: ஸ்கந்த: ப்ரஜாபதி:
மஹேந்த்ரோ தனத: காலோ யம: ஸோமோ ஹ்யபாம்பதி: 8

yEsa brahmAcha vishnusca siva: skanda: prajApathi:
mahEndrO dhanada: kAlO yama: sOmO hyapAmpati: 8

ஏச - இவனே

ப்ரஹ்மா ச - படைக்கும் கடவுளாகிய பிரம்மனும், பெரிதிலும் பெரிதானவனும் (ப்ரஹம என்றால் பெரியது என்று பொருள்)

விஷ்ணுச்ச - காக்கும் கடவுளாகிய விஷ்ணுவும், எங்கும் நிறைந்திருப்பவனும் (விஷ்ணு என்றால் எங்கும் நிறைந்தது என்று பொருள்)

சிவ: - அழிக்கும் கடவுளாகிய சிவனும், மங்கல உருவானவனும் (சிவ என்றால் மங்கலம் என்று பொருள்)

ஸ்கந்த: - தேவ சேனையின் தலைவனான முருகனும், அனைத்தையும் இணைப்பவனும் (ஸ்கந்த என்றால் இணைப்பு என்று ஒரு பொருள்), அன்பிற்கும் அறிவிற்கும் அனைத்திற்கும் ஊற்றாக இருப்பவனும் (ஸ்கந்த என்றால் ஊறவைப்பவன் என்றும் ஒரு பொருள்)

ப்ரஜாபதி: - மக்களின் தலைவனும்

மஹேந்த்ரோ - தலைவர்களுக்கெல்லாம் தலைவனான தேவேந்திரனும்

தனத: - செல்வத்தை அருளும் குபேரனும்

காலோ - காலமும்

யம: - யமனும், தண்டித்து நல்வழிப்படுத்துபவனும் (யம என்றால் தண்டிப்பவன், நல்வழிப்படுத்துபவன் என்று பொருள்)

ஸோமோ - சந்திரனும்

ஹி - உறுதியாக

அபாம்பதி: - நீரின் தலைவனான வருணனும்

முதலில் மும்மூர்த்திகளாக இருப்பவன் சூரியன் என்று சொல்லிவிட்டு பின்னர் மற்ற தெய்வங்களை எல்லாம் சொல்லி வருகிறார். மும்மூர்த்திகளுக்கு அடுத்து முருகனை முதலில் சொன்னதைப் பார்த்தால் வைதீக தெய்வங்களில் முருகனின் முதன்மை தெரியும். அகத்தியர் தன் குருவான முருகனை முதலில் சொன்னார் என்றாலும் சரியே.

பிரஜாபதி என்று பிரம்ம தேவரைத் தான் சொல்வார்கள். மும்மூர்த்திகளைச் சொல்லும் போதே பிரம்ம தேவரைச் சொல்லிவிட்டார் ஆகையால் மீண்டும் ப்ரஜாபதி என்று யாரைச் சொல்கிறார் என்று தெரியவில்லை. கணபதியை ப்ரம்மணஸ்பதி என்று தொடக்கக் கால மந்திரங்கள் சொல்வதால் இங்கே கணபதியைக் குறிக்கிறாரோ என்ற எண்ணம் உண்டு. ஸ்கந்தனைச் சொன்னவுடனே ப்ரஜாபதியைச் சொன்னதால் அது ப்ரம்மணஸ்பதியாகிய கணபதியாக இருக்கவும் வாய்ப்புண்டு.

அதற்கடுத்து முறையே தேவர்களில் முதன்மையானவர்களான இந்திரன், குபேரன், காலன், யமன், யமன், ஸோமன், வருணன் ஆகியோர் கூறப்படுகிறார்கள்.

பிதரோ வஸவ: சாத்யா ஹ்யஸ்வினௌ மருதோ மநு:
வாயு: வஹ்னி: ப்ரஜா ப்ராண: ருது கர்தா ப்ரபாகர: 9

pitarO vasava: sAdhyaa hyasvinau maruthO manu:
vAyu: vahni: prajA prAna: rutu karthA prabhAkara: 9

பிதரோ - பித்ரு தேவதைகளும், முன்னோர்களும்

வஸவ: - உலகத்தின் எல்லா இயற்கை செல்வங்களும் ஆன எட்டு வசுக்களும் (அபன், துருவன், சோமன், தரன், அனிலன், அனலன், ப்ரத்யுஷா, ப்ரபாசா என்ற இவர்களே எட்டு வசுக்கள்)

சாத்யா - என்றுமே கருமவசப்படாத நித்யர்களும் (அனந்தன், கருடன், விஸ்வக்சேனன், பாஞ்சஜன்யன், சுதர்சனன் போன்றவர்கள்)

ஹி - உறுதியாக

அஸ்வினௌ - தேவ மருத்துவர்களான அஸ்வினி தேவர்களும்

மருதோ - காற்றின் துணைவர்களான மருத் தேவர்களும்

மநு: - வைவஸ்வத மனுவும்

வாயு: - காற்று தேவனும்

அஹ்னி: - தீக்கடவுளும்

ப்ரஜா ப்ராண: - மக்களின் உயிர்க்காற்றும்

ருது கர்தா - பருவங்களை உண்டாக்குபவனும்

ப்ரபாகர: - ஒளியை உண்டாக்குபவனும், புகழைத்தருபவனும்

ஆதித்ய: ஸவிதா ஸூர்ய: கக: பூஷா கபஸ்திமான்
ஸ்வர்ண சத்ருசோ பானு: ஹிரண்யரேதோ திவாகர: 10

Aditya: SavithA: Suurya: kaga: puushA gabhasthimAn
Suvarna sadrusO bAnu: hiranyarEtO divAkara: 10


ஆதித்ய: - அதிதியின் மகனும்

ஸவிதா - அறிவானவனும், அனைவருக்கும் தந்தையும்

ஸூர்ய: - புலன்களைச் செயலாற்றத் தூண்டுபவனும்

கக: - வானவெளியில் நடமாடுபவனும்

பூஷா - அனைவருக்கும் உணவளித்து வளர்ப்பவனும்

கபஸ்திமான் - ஒளிச்சுடர்களை உடையவனும்

ஸ்வர்ண சத்ருசோ - பொன்னிறத்தை உடையவனும்

பானு: - வட்டவடிவமானவனும்

ஹிரண்யரேதோ - அனைத்தையும் படைக்கும் திறன் கொண்டவனும்

திவாகர: - பகலொளியை உண்டாக்குபனும்

இவனே உறுதியாக பிரம்மனும், விஷ்ணுவும், சிவனும், ஸ்கந்தனும், பிரஜாபதியும், இந்திரனும், குபேரனும், காலமும், யமனும், ஸோமனும், வருணனும், பித்ரு தேவர்களும், வசுக்களும், சாத்யர்களும், அஸ்வினி தேவர்களும், மருத் தேவர்களும், மனுவும், வாயுவும், அக்னியும், பிராணனும் ஆக இருக்கிறான். இவனே பருவங்களையும், பகலொளியையும் உண்டாக்குபவன். இவன் பெயர்கள் ஆதித்யன், ஸவிதா, சூரியன், ககன், பூஷா, கபஸ்திமான், பானு என்று பலவாறானவை.
அடுத்த பகுதியில் பதினொன்றாம் சுலோகத்திலிருந்து பார்க்கலாம்.

2 comments:

வல்லிசிம்ஹன் said...

சூரியனைத் தினமும் வணங்கல் வேண்டும்.
எங்களுக்கு இந்த ஸ்லோகத்தைப் படிப்பித்த குரு, தினம் ஒன்பது தடவை சொல்லச் சொல்லுவார். மனசுத்தி,ஞாபக சக்தி,சுறுசுறுப்பு,பாதுகாப்பு எல்லாம் கொடுக்கக் கூடிய மந்திரம் என்று சொல்லிக் கொண்டே இருப்பார்.
ரொம்ப நன்றி குமரன். மீண்டும் அவரையும்,கதிரவனையும் என் வாழ்க்கையில் அழைத்ததற்கு.
வெகு தெளிவாக இருக்கிறது.

குமரன் (Kumaran) said...

உண்மை தான் வல்லியம்மா. நானும் பல முறை தொடர்ந்து 9 முறை இந்த துதியைச் சொல்லியிருக்கிறேன். நீங்கள் சொன்னவையெல்லாம் பயன்களாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.